Friday, July 09, 2010

வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டமா? அல்லது இஷ்டமா?
காலை எட்டு மணிக்கு அடிக்கும் வெயில் நம்மூர் மதிய வெயிலை விட அதிகம்.ரூமிலிருந்து கடை 500 மீட்டர் தூரம் இருக்கும். அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக வந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்த அளவு அனல்.

இங்கு க‌டை, வீடு, கார் அனைத்திலும் ஏசி வ‌ச‌தி இருப்ப‌தால். க‌டைக‌ளில் வேலைப்பார்ப்ப‌வ‌ர்க‌ளுக்கு அதிக‌ பாதிப்பில்லை. ஆனால் க‌ட்டிட‌வேலை, சாலைப்ப‌ணி, பாலை நில‌ங்க‌ளில் இயந்திர நிர்மாண‌ ப‌ணிக‌ளை மேற்கொள்ப‌வ‌ர்க‌ளின் நில‌மை ப‌டுமோச‌ம்.

ச‌வுதிக்கு வேலைக்கு வ‌ந்த‌வ‌ர்க‌ள் எதிர்கொள்ள‌வேண்டிய‌ முக்கிய‌ ச‌வால் இங்குள்ள‌ ப‌ருவ‌ நிலைதான். க‌டும் குளிர், சுடும் வெயில். இது இர‌ண்டையும் தாக்கு பிடிக்க‌ முடிய‌வில்லை என்றால் ஊருக்குப் போய்விட‌ வேண்டிய‌துதான்.

அதே போல் ம‌ற்றொரு ச‌வால் குடும்ப‌ங்க‌ளை பிரிந்திருப்ப‌து. வீட்டில் அனைவ‌ரிட‌மும் பேசும் போதே இங்கு ந‌ம் ம‌ன‌க்க‌ண்ணில் அவ‌ர்க‌ள் என்ன‌ செய்து கொண்டிருப்பார்க‌ள் என்ப‌து தெரியும். குழ‌ந்தை ந‌ட‌ப்ப‌தையும், விளையாடுவதையும், அதற்கு பல் முளைத்ததையும் அவ்வாறே நாம் உணர முடியும்.

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு குழப்பம் வரலாம். இவ்வ‌ள‌வு க‌ஷ்ட‌த்தையும் தாங்கிக்கொண்டு எத‌ற்கு வேலைப்பார்க்க‌ வேண்டும் ஊருக்கு வ‌ந்து விட‌ வேண்டிய‌து தானே. ஆனால் வருடா வருடம் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டல்லவா இருக்கிறது என்று நீங்க‌ள் நினைப்ப‌து நியாய‌ம் தான்.

இங்கு வாழ்ப‌வ‌ர்க‌ளை ஊருக்கு வ‌ர‌விடாம‌ல் த‌டுப்ப‌து எது, யார் என்ன சொன்னாலும் ஊரில் இருப்ப‌வ‌ர்க‌ள் இன்னும் வெளிநாடு வ‌ர‌ துடிப்ப‌துக்கு எது கார‌ண‌ம்.

எல்லாவற்றிற்கும் ஒரு காரணம், ஒரே காரணம் பணம்.

சம்பாதித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்ற ஆசை. வெளிநாடு சென்றால்தான் ஊரில் உள்ள கடன்களை அடைக்க முடியும் என்ற சூழ்நிலை.

பொதுவாக வெளிநாடு செல்பவர்களின் நிலை புலி வாலை பிடித்த கதைதான். நாம் விட நினைத்தாலும் ஊர் சூழலும், பிரச்சனைகளும், ஊரில் போய் என்ன வேலை செய்ய என்ற பயமும் நம்மை ஊர் திரும்ப விடாது.

இங்குள்ளவர்களின் வாழ்க்கை நிலையை அலசுவதற்கு முன், முதலில் இங்குள்ள வேலை வாய்ப்புகளை பார்த்து விடலாம்.

வீட்டுப்பணி பெண்கள், வீட்டு டிரைவர்கள் இவர்கள் வீட்டுப்பணிக்கு மட்டும் வெளியில் வேலை பார்க்க கூடாது. இவர்களது அடையாள அட்டையில் அது குறிப்பிடப்பட்டு இருக்கும். ( ஆனால் பெரும்பாலான‌ டிரைவர்கள் வெளியிலும் வாடகைக்கு வண்டி ஓட்டுவார்கள் அது அவர்களின் சாமர்த்தியத்தை பொறுத்தது)

கடைகள் , சோரூம்கள், கம்பெனிகளுக்கு சேல்ஸ்மேன், டெக்னீசியன், டிரைவர், கேசியர் இன்னும் பல பணிகளுக்கு ஆள் எடுப்பார்கள். இங்கு ஓவர்டைம், போனஸ் மற்றும் இன்ன பிற சலுகைகள் ( இருந்தால்! ) கிடைக்கும். நமக்கு அமையும் இடத்தை பொறுத்து இதெல்லாம் மாறுபடும்.

சாலைப்பணி, கட்டிடப் பணி, இயந்திர நிர்மாண பணி, மற்றும் இது போன்ற புறச்சூழல் பணிக்கு வருபவர்களின் பாடுதான் கஷ்டம். இங்குள்ள கடும் குளிரையும், வெயிலையும் நேரடியாக சந்திப்பது இவர்கள்தான்.

இங்கு குறிப்பிட்டது போக மேலும் இது போல பல பணிகள் உள்ளன.

ஏஜெண்ட் மூலமாகவோ அல்லது சொந்தங்கள், நண்பர்கள் மூலமாகவோ விசா பெற்று இங்கு வருபவர்கள்தான் அதிகம்.

வீட்டிலுள்ள நகை நட்டையெல்லாம் விற்று , கடன் வாங்கி அல்லது சொந்த சேமிப்பைக்கொண்டு வெளிநாட்டுக்கு விமானம் ஏறி மேலே குறிப்பிட்ட எந்த வேலைக்கு வருபவர்களுக்கும் மூன்று வகையான‌ வாழ்க்கை காத்திருக்கிறது.

முதல் வகை ( ஏமாற்றம் )

ஏஜெண்டால் ஏமாற்றப்பட்டு , சொன்ன சம்பளம் கிடைக்காமல், சொன்ன வேலைக்கு பதில் வேறு கஷ்டமான வேலை கிடைப்பது. கொடுமையான முதலாளி அடிமை போல நடத்துவது என்று இவர்களுடைய கதைகளைதான் அடிக்கடி பத்திரிகைகளில் பார்க்கிறீர்கள்.இதிலிருந்து இவர்கள் மீள்வது ஆயுள் தண்டனை கைதி சிறையிலிருந்து தப்புவதற்கு சமம்.

சிலபேர் பணம் போனால் போகிறது எனக்கு வேலை வேண்டாம் என்று ஊர் திரும்பிவிடுவார்கள் (அதுவும் முதலாளி அனுமதித்தால்தான்). எல்லா சொத்தையும் விற்று வருபவர்களின் கதி? அதோ கதிதான். ஊருக்கு சென்றால் கடன் கழுத்தை நெரிக்கும். வேறு வழிகிடையாது. கிடைக்கும் சொற்ப பணத்தையாவது ஊருக்கு அனுப்பி வைத்து இங்குள்ள சூழ்நிலையை மறைத்து வாழ்பவர்கள் நிறையபேர். இவர்களின் கதையைக்கேட்டால் கண்ணீர் வந்துவிடும்.

இரண்டாம் வகை ( நடுத்தரம் )

ஏஜெண்டுகள் , அல்லது விசா கொடுத்தவர்கள் சொன்ன மாதிரி வேலை கிடைக்கும், சம்பளமும் சொன்ன மாதிரி கிடைக்கும். ஆனால் பெரிய முன்னேற்றம் எதுவும் இருக்காது. கொடுத்த வேலையைப் பார்த்துக்கொண்டு கிடைத்த சம்பளத்தை ஊருக்கு அனுப்பி விட்டு வருடத்துக்கு ஒருமுறையோ , இரு வருடத்துக்கு ஒரு முறையோ முதலாளி செலவில் ஊர் சென்று திரும்பி வந்து மறுபடியும் செக்கிழுக்க வேண்டியதுதான். நான், ஸ்டார்ஜன், சரவணன் எல்லாம் இந்த பிரிவில்தான் இணைகிறோம் :)


மூன்றாம் வகை ( முன்னேற்றம் )

இது உண்மையிலேயே சவாலான சூழல். இந்த வாழ்க்கைக்கு ஏங்கித்தான் ஊரிலிருந்து கனவுகளோடு மக்கள் இங்கு வருவது. ஆம் சொந்தமாக கடைகள் சோரூம்கள் நடத்துவது. இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. நமக்கு வாய்த்த முதலாளி மாதா மாதம் இவ்வளவு பணம் கொடுத்து விடு என்று சொல்லி கடையை நம் கையில் கொடுத்து விடுவார். அதிலுள்ள லாபமும் நட்டமும் நம் பொறுப்பு. இந்த மாதிரி வாய்ப்பு கிடைத்தவர்கள் தான் ஊரில் கோடீஸ்வரனாகி இருக்கிறார்கள். அது போல் வாய்ப்பை சரிவர பயன்படுத்த தெரியாமல் நஷ்டம் ஆனவர்களும் உண்டு. அது அவரர்களின் திறமை, அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

என்ன நண்பர்களே இப்போது சொல்லுங்கள் வெளிநாட்டு வாழ்க்கை கஷ்டமா? அல்லது இஷ்டமா?

டிஸ்கி : இங்கு முடிந்தவரை அனைவருக்கும் பொதுவான விசயங்களை குறிப்பிட முயன்றுள்ளேன். இது எனது கருத்து மட்டுமே. இங்கு வசிக்கும் பலருக்கு இதைவிட மோசமான் அல்லது நல்ல அனுபவங்கள் கிடைத்திருக்கலாம்.
நன்றி  சினேகிதன்

No comments: